- ஷவம் (2015) இயக்கம்: டான் பலதரா
கேரள கிராமப்புறமொன்றில், நடுத்தர கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்த தாமஸ் இட்டிக்கோரா விபத்தில் பலியானதையடுத்து அவரது சடலம் வீட்டிற்குக் கொண்டுவரப்படுகிறது. அவரது மனைவி, வாரிசு; தாய்; மூத்த இளைய சகோதரர்கள், அவரது மற்ற உறவினர்கள்; நண்பர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்கின்றனர். ஒரு மணிநேரம் மட்டுமேயுள்ள இப்படத்தில் மனிதன் சக மனிதனின் இழப்பில் காட்டும் பொறுப்பின்மை குரூர பகடியாக வெளிப்படுகிறது. உறவுகளுக்குள் இறுதிச்சடங்கு செய்வதற்கான செலவினை ஏற்பதில் வரும் உரசல்கள்; சர்ச் கட்ட நிதி தராததால்தான் தாமஸ் மாண்டதாக இறுதிச்சடங்கிற்கு வரும் தலைமைப் பாதிரி போட்டுடைப்பது அதனையே மற்றவர்களுக்கு மிரட்டலாகச் சொல்வது போல பல உதாரணங்கள் சொல்லலாம். மெதுவாக நகரும் திரைக்கதை; ஆவணப்படம் போன்ற ஒளிப்பதிவு, முன்னணியில் பார்வையாளர்களை உருத்தாத பின்னணி இசை; கருப்பு வெள்ளை நிறம்; சற்றும் மிகையில்லாத இயல்பான வசனங்கள்; தொழில்முறையினரல்லாத நடிகர்கள் என 7 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த சுயாதீன சினிமா பல்வேறு காரணங்களுக்காக மிக உயர்வான இடத்தைப் பார்வையாளன் மனதினில் பெறுகிறது.
1, படத்தின் தலைப்பு ‘ஷவம்’: இதில் எவ்விதமான ‘சுட்டிக்காட்டுதலும்’ இல்லை. ‘பிணம்’. நல்லதோ, கெட்டதோ, அதற்கு என்ன ஆகிறது? அது எப்படியிருந்தது.. அதன் நிலை என தலைப்பில் எதுவுமில்லை. வெறும் பிணம். எனவே இயக்குநர் இதைத்தான் சொல்கிறார் என கறாராக ஒற்றை முடிவினைப் பார்வையாளரால் அடையவே இயலாது. சமயங்களில், நாவல்களிலும், சிறுகதை மற்றும் கவிதைகளில் அவற்றிற்கு வைக்கப்படும் தலைப்பு வன்முறையானதாக தெரிந்துள்ளது. காரணம் படைப்பாளி தான் வைக்கும் தலைப்பின் மூலமாக ’இதைத்தான்’ சொல்கிறேன் என நிறுவுகிறார். இது நம் தனிப்பட்ட கருத்து தான். ஆனாலும், தலைப்பினைத்தாண்டி படைப்பிலுள்ள இழைகளை வாசகன் கண்டுணரும்போதே படைப்பாளி மகிழ்வடைகிறான், அப்படைப்பும் மேன்மையடைகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
2. பின்னணி இசை: வழக்கமான திரைப்படங்களில், சோகத்திற்கு, மகிழ்விற்கு, காதல் மனநிலைக்கு, திகிலுக்கு என பின்னணி இசை கோர்க்கப்பட்டிருக்கும். மகிழ்வான காட்சியில் அதற்கேற்றாற் போல இசை வழங்கும்போது ‘நான் இந்த இடத்தில் பார்வையாளன் மகிழ்வுர வேண்டுமென நினைக்கிறேன்’ என இயக்குநர் முடிவெடுக்கிறார். மகிழ்வைத்தாண்டி வேறொன்றையும் பார்வையாளன் எய்துவதில்லை. ஷவம் படத்தைப் பொறுத்தமட்டில், அப்படி பார்வையாளர்களை ஒருதிசை நோக்கிச் செலுத்தும் தன்மை துளியும் இல்லை. இதனால், குறிப்பிட்ட காட்சி, அதீத சோகமா? பகடியா? வறட்டு எதார்த்தமா என இயக்குநரோ இசை அமைப்பாளரோ சொல்வதில்லை. இதன் மூலம் பார்வையாளனின் பங்களிப்பைக்கோரி அவனாக இங்கு ஒரு முடிவினை எடுத்துக்கொள்ள இயக்குநர் வழிவைகை செய்கிறார்.
3. மையநீரோட்ட சினிமாவின் பிரபலமான நடிகர்கள் இதில் நடிக்காதது: நடிகர்கள் என்னதான் பல்வேறு வகையான பாத்திரங்களை எற்று குரல், முகம், ஆடை என மாற்றி நடித்தாலும் அவர்கள் படங்களைப் பார்க்கையில் அவர்களுக்கென உள்ள பிம்பம் நம் மனதில் முன்பாகவே தோன்றிவிடும். அதைத்தாண்டி அக்கதாபாத்திரமாகவே மாறி நம்மை வீழ்த்துவது அந்நடிகனின் தனித்திறமை. இப்படத்தில் அனைவரும் புதுமுகங்கள். அவர்களை படத்தில் வருபவர்களாகவே நாம் அறிகிறோம். இது பார்வையாளனுக்கு அகண்ட வெளியை/ சுதந்திரத்தைத் தருகிறது.
ஆகவே நண்பர்களே, மேற்சொன்னபடி பார்வையாளனின் பங்களிப்பைக்கோரி அவனை நேரடியாக உள்ளே இழுக்கும் இப்படத்தை முழுநீள பகடியாக, எதார்த்த சூழலில் மனிதர்களின் அக அழுக்கினை அப்படியே படம்பிடிக்கும் ஆவணப்படமாகவும், இதையெல்லாம் தாண்டி இதுவரை இல்லாத வகையில் பிணத்தைச் சுற்றியுள்ள சூழலைக் காட்டியமைக்காக இதனை நவீன பிரதியாகவும் கொண்டு பல வகைகளில் அணுகலாம். நம்வரையில் இக்காரணிகளே இப்படத்தை உயர்வான தளத்தில் தூக்கி வைக்கின்றன.
நல்ல மலையாள திரைப்படங்களை தன் தளத்தில் வெளியிடும் நெட்பிளிக்ஸ் இப்படத்தை சென்ற ஆண்டு ஜூலை மாதத்திலேயே வெளியிட்டாலும் பலர் இதுகுறித்து அறியாமல் உள்ளனர். வாய்ப்பு கிடைக்கும்நேரத்தில் பார்த்துவிடுங்கள்.
- ஈ.மா.யாவு (2018) இயக்கம்: லிஜோ ஹோஸ் பெலிசெரி
/இப்படம் குறித்து எழுதும் எண்ணமில்லை. இது தந்த அனுபவத்தை எவ்வளவு முயன்றும் படம் பார்த்துமுடித்தவுடன் என்னால் எழுதமுடியவில்லை. ஷவம் குறித்து பேசுகையில் இதுகுறித்தும் சொல்வது கடமையாகிறது. எனவே இக்குறிப்பு ஒரு சிறு அறிமுகத்தையாவது வாசிப்பவருக்குத் தந்தால் நல்லது/ஈ.மா.யாவு கேரளாவில் வெளியாகி விமர்சனரீதியாக நல்ல வரவேற்பினைப் பெற்றுவந்த சமயத்தில் நண்பர் ஒருவர் உடனடியாக இதனைப் பார்க்கச்சொன்னார். ’Go attend this funeral’ என அவர் அனுப்பிய குறுஞ்செய்தி இன்னும் நினைவிலிருக்கிறது. சில நாட்கள் கழித்து, சென்னையில் இப்படம் வெளியானது. யாரையும் அழைக்காமல் தனியே சென்று பார்த்துவிட்டு வந்தேன்.
எர்ணாகுளத்தின் கடலோர மீனவ கிராமம் செல்லனம். அதில் ஒரு கிறித்தவ மீனவக் குடும்பம். வாவச்சன் மேஸ்திரி & பென்னம்மா. இவர்களது மூத்த மகன் ஈஷி. மகள் நிசா. மருமகள் சாபெத். நீண்ட நாள் கழித்து தன் குடும்பத்திற்கு திரும்பும் அந்தப் பகுதியின் பிரபலமான வாவச்சன் மேஸ்திரி கையில் ஒரு வாத்துடன் வருகிறார். அவர் இப்படித்தான். எப்பவாவது குடும்பத்தைப் பார்க்க வருவார். அன்று வந்ததும் மகனுடன் சேர்ந்து தாரளமாக மது அருந்துகிறார். பின்னணியில் கடலின் ஓங்காரமும் காற்றின் சப்தமும் அவ்வப்போது குரல் கொடுக்கும் கப்பல்களின் தீவிரமான ஹாரனும் இருக்கின்றன.போதை தலைக்கேரிய நிலையில், வாவச்சன் தன் மகனிடம், தனது தந்தை இறந்தபோது இந்த சுற்றுவட்டாரமே பிரமிக்கும் வகையினில் இறுதிச்சடங்கினை ஏற்பாடு செய்து அமர்க்களப்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார். அதற்கு ஈஷி, கவலைப்படவேண்டாம் உங்களுக்கும் நான் பிரம்மாண்டமாக அனைவரும் வாய்பிளக்கும்படி இறுதிச்சடங்கினை நடத்துவேன் என உறுதியகக் கூறுகிறான். பின்பு நாட்டுப்புறப்பாடலொன்றைப் பாடி, தள்ளாடியபடி நடனமாடுகிறார் வாவச்சன் மேஸ்திரி. கால் தடுக்கி கீழே விழுந்தவர் உயிர் அப்படியே பிரிந்துவிடுகிறது.
அதன் பிறகு ஈஷி தன் தந்தைக்கு எப்படி இறுதிச்சடங்கினை செய்து முடிக்கிறான் என்பதே முழுப்படமும். அவனுக்கு பொருளாதார நெருக்கடி வேறு. நண்பர்கள் உதவிக்கு வருகிறார்கள். இதில், வழக்கமாக கதையின் நாயகனுக்கு வரும் லட்சியமும், அதைச்சுற்றி அதன் முடிவு நோக்கி திரைக்கதை எழுதப்படுவதும் நிகழ்கிறது. இப்படம் ‘ஷவம்’ படத்திலிருந்து வேறுபடும் புள்ளி இதுதான். இப்படமும், மீனவ மக்களின் சமூக பொருளாதார நிலை, அவர்களை ஆட்டுவிக்கும் பாதிரியார், என அபத்த நகைச்சுவைக்கு தேவையான மிகைப்படுத்தல்களுடன் உக்கிரமான மனநிலைக்கு இட்டுச்செல்லும் முடிவைனையும் கொண்டுள்ளது. இதிலும் பின்னணி இசை இன்றி அமைதியும் இயல்பான சப்தங்களும் வலு சேர்க்கின்றன. மென்மையாக துவங்கும் படம் புயலென அடித்து ஆய்ந்து ஓய்கிறது. ஈஷியின் உக்கிர மனநிலை பார்வையாளனுக்குள்ளும் புகுந்து அது குறைய ஒரு நாளாவது ஆகும். ஆமென், அங்கமாலி டைரீஸ் படம் மூலம் தன் திறமையை நிரூபித்த லிஜோ ஹோஸ் இப்படம் மூலம் இந்திய சினிமா உலகில் முக்கியமான இடத்தினைப் பெறுகிறார். இதனை விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் எதிர்பார்க்கலாம்.
- டோக்யோ ஸ்டோரி (1953) இயக்கம்: யஜுசிரோ ஓசு
போருக்குப் பிறகான ஜப்பானிய நகரம். இன்னும் அதிலிருந்து முழுமையாக மீண்டுவராத தருணம். தங்களின் கடலோர கிராமத்தில் கடைசி மகளுடன் வசிக்கின்றனர் வயதான தம்பதிகள். தங்கள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்கள் எனலாம். அவர்களுக்கு நீண்ட தொலைவில் டோக்கியோ நகரத்தில் தங்கள் குடும்பங்களுடன் வசிக்கும் தங்கள் மகன், மகள் மற்றும் போரில் மாண்ட மகனின் மனைவி ஆகியோரைக் காண ஆசை வந்து டோக்யோவிற்கு ரயிலில் பயணமாகிறார்கள். அவர்களுக்கு பல ஆண்டுகள் கழித்து தங்கள் வாரிசுகளைக் காண்பதில் மகிழ்ச்சி. வாரிசுகளுக்கும் மகிழ்ச்சி தான். ஆனால், தங்கள் அன்றாட பொருளீட்டும் வாழ்விலிருந்து நேரம் ஒதுக்கி பெற்றோர்களை டோக்கியோ நகரத்தைச் சுற்றிக்காட்ட அழைத்துச்செல்ல முடியவில்லை. மேலும், அவர்களுக்கு ஆர்வமோ, அதீத அக்கரையோ இருப்பதில்லை. ஆனால், சொந்த வாரிசுகளைக் காட்டிலும் வறுமையில் வாழ்ந்தாலும் அவர்களது ரத்த சொந்தமில்லாத மருமகள் நோரிக்கா நன்றாக கவனிக்கிறாள். அவர்களுக்கு டோக்கியோ நகரையும் சுற்றிக்காண்பிக்கிறாள். அவளது தூய்மையான உள்ளத்தைக் கண்டு நெகிழும் பெற்றோர்கள், அவள் தங்கள் மகனின் மரணத்திற்குப் பிறகு 8 ஆண்டுகளாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியே வாழ்வது குறித்து கவலையுறுகின்றனர். வாரிசுகள் இணைந்து பெற்றோரை மலிவான ஸ்பா ஒன்றிற்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு பெற்றோர்களுக்கு தூக்கம் கெடுகிறது. விரைவிலேயே மகள் வீட்டிற்குத் திரும்பிவிடுகிறார்கள். இது மகளுக்கு பிடிக்கவில்லை. இப்படியே செல்லும் கதையில் ஒரு கட்டத்தில் தங்க இடமில்லாமல் அல்லல்படுகின்றனர். பின்னர், பெற்றோர்கள் இருவரும் யாருக்கும் தொல்லை தரவேண்டாம் என தங்கள் சொந்த கிராமத்திற்கே திரும்புகின்றனர். அங்கு அவ்ந்ததும் கலைப்புற்றிருந்த தாய் நோய்ப்படுக்கையில் வீழ்கிறார். இப்போது வாரிசுகளும், மருமகளும் டோக்கியோவிலிருந்து பெற்றோர்களின் கிராமத்திற்கு தங்கள் தாயாரைப் பார்க்க வருகிறார்கள்.
பிறகு கனத்த சில நிகழ்வுகளுக்குப் பிறகு ஆர்ப்பாட்டமில்லாமல் படம் முடிகிறது.
ஜப்பானிய கலாச்சாரத்தில் அமைதி முக்கிய பங்கு வகிப்பதாக எங்கோ படித்திருக்கிறேன். அமைதியாக இருக்கும் ஒருவரிடம் சென்று பேசிய பிறகு ‘உங்கள் அமைதியை குலைத்தமைக்காக மன்னிப்புக்கோருகிறேன்’ என்பார்களாம். ’டோக்கியோ ஸ்டோரி’ படம் பலருக்கு பல காரணங்களுக்காக இன்றும் பிடிக்கிறது. என்றும் பிடிக்கும். எனக்கு இப்படைப்பின் ’கலை அமைதிக்காக’ பிடிக்கிறது. இந்தக் கலை அமைதியை இதுவரை ஜப்பானிய படங்களில் மட்டுமே கண்டுள்ளேன்.
1953ம் வருடம் யஜுசிரோ ஓசுவின் இயக்கத்தில் வெளியான ‘டோக்கியோ ஸ்டோரி’ எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பினைத் தராத உணர்வுக்குவியல். இந்த மூன்று படங்களும் ஒரு புள்ளியில் இணைவதாக நம்புகிறேன் .அது மனிதர்களின் அக்கறையின்மை, சகிப்புத்தன்மையின்மை, உதவாமை என அக அழுக்காககவும் இருக்கலாம். இப்படத்தின் தாக்கம் தான் Nobody Knows, Like father; Like Son; our Little Sister, After the Storm, Shoplifters போன்ற படங்களை இயக்கிய சமகால ஜப்பானிய சினிமாவின் முதன்மை இயக்குநர் கொரிடாவிடமும் இருக்கிறதென அடித்துக்கூறலாம்.
—
ஒன்றைக் குறித்து எழுதும்போது ‘இதைக் குறித்து எழுதியே ஆகவேண்டுமா?’. நாம் எழுதவில்லை எனில் என்ன குடியா முழுகிவிடும்?’, ’திரைப்படம் தந்த காட்சி அனுபவத்தை வார்த்தைகளில் எப்படிக் கடத்துவது?’ என பல கேள்விகள் எழுந்தாலும். சுருக்கமாகவேணும் இதனைப் பகிர்ந்ததில் ஒரு மனநிறைவு.
சுக்ராளி கிராமம் | குர்கான் – ஹரியானா
21:00 மணி