சாம்ராஜ் எழுதியுள்ள இந்த மூன்று கவிதைகள் தான் மனதில் துள்ளலான பெயர்சொல்லமுடியாத உணர்வுநிலைக்கு என்னைத் தள்ளியிருக்கின்றன. அந்த மேலான உணர்வுநிலைக்கு ஒரு பெயரினை யோசிக்கையில் இந்த உவமானம் தோன்றியது. மனதினை ஒரு உயிருள்ள சதைப்பிண்டமாக நினைத்துக்கொள்ளுங்கள்; அதிலொரு நத்தை மெதுவாக ஊர்ந்து செல்லும்போது ஒரு குறுகுறுப்பு சதைப்பிண்டம் முழுக்க பயணித்து அதில் மயிரிக்கால்கள் இருப்பின் அதனை குத்திட்டு நிற்கச் செய்யும். அப்படி ஒரு குருகுருப்பினை இக்கவிதைகள் உணரச்செய்தன. இதுபோன்ற அதீத உணர்வுநிலைக்கு கவிதைகள் மட்டுமே என்னை இட்டுச்செல்கின்றன. புன்னகை, ஆச்சரியம், அதிர்ச்சி என்ற கலவையான முகப்பாவங்களைத் தோற்றுவிக்கிறது இக்கவிதைகள்.
1
ரப்பர் மரங்களுக்குள்
காலையின் சூரிய ஒளி
புழைக்கு போகிறது
இப்பாதை
சலவைக்கல் வீட்டில்
கர்த்தர் சட்டகத்துக்குள்
தெற்கு பார்த்து அமர்ந்திருக்கிறார்
ரோமம் இல்லாத தேகமாய்
நிற்கின்றன பாக்கு மரங்கள்
நல் இதயங்களுடன்
பள்ளிக்கு போகிறார்கள் சிறுமிகள்
மீன்காரனின் கூவலுக்கு
காத்திருக்கின்றன பூனைகள்
“சர்ப்பம் அழிச்சு” கீதம்
எங்கிருந்தோ மிதந்து வருகிறது
கதகளி கோலத்தில்
உத்திரத்தில் தொங்கும்
ஜோசப் சாக்கோ
காத்திருக்கிறார் கதவு உடைபட
_0_
இந்தக் கவிதை வெறும் படிமங்களை மட்டுமே சொல்கிறது. காட்சிகளைக்ஆ காட்டுகிறது. ஆனால் இறுதி வரிகளில் ஒரு அதிர்ச்சி. என்ன என்பதை மட்டுமே காட்டுவது கவிதையில் ஒரு பாணி. ஏன்? எதனால்? என்பதற்கான பதில்களை இக்கவிதை நேரடியாகச் சொல்வதில்லை. ஆனால் என்ன என்பதை மட்டும் நமக்கு வார்த்தைகள் மூலமாக காட்டச்செய்ததில் இக்கவிதை அழகும் நளினமும் கொண்டு சாசுவதநிலை அடைகிறது. நிலக்காட்சிக்கான விவரிப்பு ‘ரப்பர் மரங்கள்’, ‘அதில் விழும் சூரிய ஒளி’; அடுத்த காட்சி மனிதனால் உருவாக்கப்பட்ட காட்டுவழிப்பாதை; அடுத்ததாக சலவைக்கல் வீடு, வசதியானவர்கள், அவர்கள் வீட்டில் சட்டகத்திற்குள் தெற்கு நோக்கியபடி ஏசுநாதர்; மீண்டும் நிலக்காட்சி; பாக்கு மரங்கள் குறித்த வர்ணனை; சிறுமிகள் (சிறுவர்கள் பற்றி அவருக்குக் கவலையில்லை) வன்மமில்லாதவர்கள், நல்லிதயம் கொண்ட அவர்கள் பள்ளி செல்லும் காட்சி; மீன்காரனின் கூவலுக்காகக் காத்திருக்கும் பூனைகள்; மீன்காரனின் கூவலுக்கு ஏன் மீன்கள் காத்திருக்க வேண்டும்? வேறு எதற்கு சிதறும் துண்டுகளை விழுங்குவதற்குத் தான்; எங்கிருந்து என்று சொல்லவில்லை, ஆனால் எங்கிருந்தோ ‘சர்ப்பம் அழிச்சு’ பாடல் காற்றின் ஊடாக வருகிறது; எவ்வளவு எளிமையான காட்சிகளைக் காட்டுகிறார். அடுத்த வரிகளில்
“கதகளி கோலத்தில்
உத்திரத்தில் தொங்கும்
ஜோசப் சாக்கோ
காத்திருக்கிறார் கதவு உடைபட”
இந்த வரிகளில் இது அற்புதமான கவிதையாகிறது. யாருமறியாமல் உள்ளே தாழிட்டு, உத்திரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஜோசப் சாக்கோ வீட்டுக்கதவுகள் உடைக்கப்படுவதற்காகக் காத்திருக்கின்றன. சரி, அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து எழுத்தாளருக்கோ வாசகருக்கோ புகாரில்லை; ஆஹா அற்புதம்.
2
இரண்டாவது ஒரு குறும்புக்கவிதை.
கையில் கூண்டோடு
ஜோசியக்காரன்
மரம் மறைவில்
சிறுநீர் கழிக்கையில்
முகத்தை திருப்பிக் கொள்கிறது கிளி.
3
சுரங்கங்களைப்பற்றிய பேச்சு
எப்பொழுதும்
மர்மாகவே இருக்கிறது.
கோவிலிருந்து கடற்கரைக்கு
அரண்மனையிலிருந்து கோவிலுக்கு
பொக்கிஷ அறைகளிலிருந்து
கைவிடப்பட்ட பழைய நந்தவனங்களுக்கு
போகின்றன அதன் ரகசிய பாதைகள்
பேசும்பொழுதே
மண் சரிகின்றன
வார்த்தைகளின் மீது
உரையாடும் எவரும்
நேரில் கண்டதில்லை அதை
பாதாள சாக்கடைக்காக
நகரமே தோண்டப்பட
மறுபடியும் சொற்களில்
உயிர் பெறுகின்றன சுரங்கங்கள்
கழிவுநீர் குழாய்கள் பதிக்க வெட்டப்பட்ட
ஆழமான குழிகளை
சரித்திர சந்தேகங்களோடு
கடந்து செல்கின்றனர்.
கான்கீரிட் இடப்பட்ட
சாலைகளில் பயணிப்பவர்
மானசீகமாய்
நடக்கின்றனர்
ஒரு சுரங்கத்தின் மீது.
பின்னிரவில்
வெளிவரும் பெருச்சாளி
தன் அநாதி மூதோன்
கல்லாகப் பார்த்த தூணின் மிச்சத்தில்
சற்று நேரம் பதுங்கிப்போகிறது.
_0_
இக்கவிதை பிடிக்க எனது தனிப்பட்ட, சுரங்கங்கள் மீதான என் காதலும் ஒரு காரணமாக இருக்கலாம். சிறுவயதில் படித்த பொன்னியின் செல்வன் (கந்தன் மாறன் மர்ம உருவத்தால் தள்ளிவிடப்படுவானே! பழி கூட வந்தியத்தேவன் மீது விழும்) சில வருடங்களுக்கு முன்னர் பார்த்த கொரிய நியோ ந்வார் திரைப்படமான The Moss ஆகியவை நினைவுக்கு வருகின்றன. சுரங்கங்கள் ரகசியம் பொருந்தியவை. அது அரசர் உட்பட வெகுசிலருக்கே தெரிந்திருக்கும்; அந்த அரசரும் வேகுசிலரும் மாண்டபின்பு அந்த ரகசியமும் மண்ணோடு புதைந்துபோகின்றன; கேபிள் வயர் பதிக்க, பாதாள / சாதாரண சாக்கடைக்காக, ஏனைய பிற கட்டுமானப்பணிகளுக்காக குழி தோண்டப்படுகையில், அதுவரை புதைந்திருந்த ரகசியச் சுரங்கங்கள் “மறுபடியும் சொற்களில்
உயிர் பெறுகின்றன”; கடைசிவரிகள்
“பின்னிரவில்
வெளிவரும் பெருச்சாளி
தன் அநாதி மூதோன்
கல்லாகப் பார்த்த தூணின் மிச்சத்தில்
சற்று நேரம் பதுங்கிப்போகிறது”
சாதாரணத்தை ஒரு வரியில் அசாதாரண நிலைக்குக் கொண்டு செல்கிறார் சாம்ராஜ். இவரது பார்வைதான் எவ்வளவு அழகு; அதனை எழுத்தில் வடிக்கையில் எவ்வளவு அடர்த்தி, நிதானம், எளிமை. இவரின் கவிதைத் தொகுப்புகளை வாசித்தே ஆகவேண்டும் என ஆவல் மீதுருகிறது. கே.என்.செந்திலுக்கு மனமார்ந்த நன்றிகள். சாம்ராஜ் அவர்களை கேரள சர்வதேசத் திரைப்படவிழாவில் நண்பர் சுரேன் அறிமுகம்செய்ய முதல்முறையாக சந்தித்தேன். அப்போது அவர் கவிதைகளை வாசித்திருக்கவில்லை. அதற்கு இவ்வளவு நாட்கள் பிடித்திருக்கிறது. அதுவும் முற்றிலும் புதிய நகரம், புதிய சூழலில், வெக்கையே வியாபித்திருக்கும் கசகசப்பான கான்கிரீட் கூடுகள் நிறைந்த சென்னையில் வாசிப்பு கைகூடுமோ என்ற சந்தேகத்தில் இருந்த எனக்கு பேய் வாசிப்பு சாத்தியம் என கட்டியம் கூறுகிறது இந்த மூன்று கவிதைகள்.
நன்றி ‘கபாடபுரம்’ இணைய இதழ்.
இணைப்புகள்:
ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்
அன்பிற்கினிய வண்ணதாசன் சாருக்கு(1)
Poem 1
https://twitter.com/arasu1691/status/640940859819626496
Poem 2
https://twitter.com/arasu1691/status/735887276060745728